லாரி மோதி தூய்மை பணியாளர் பலி


லாரி மோதி தூய்மை பணியாளர் பலி
x

லாரி மோதி தூய்மை பணியாளர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

லாரி மோதி தூய்மை பணியாளர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தூய்மை பணியாளர் பலி

கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டணம்புதூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

5 பேர் படுகாயம்

அதன்பிறகும் அந்த டிப்பர் லாரி நிற்காமல் தாறுமாறாக ஓடி அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த இருகூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வினோத் குமார், திருமூர்த்தி, முனியப் பன், முருகன், ராஜ்குமார் ஆகிய 5 பேர் மீது மோதியது.

இதில் அவர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த டிராக்டர் மீது மோதி லாரி நின்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரங்கநாதனின் உடலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் ரங்கநாதனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் சமூக நீதி தொழிற்சங்கத்தின் சார்பில் பன்னீர் செல்வம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் ரங்கநாதனின் உடலை பெற்றுச்சென்றனர்.

நிவாரணம் வேண்டும்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தூய்மை பணியாளர்களின் பணி நேரத்தை காலை 5.45 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு மாற்ற வேண்டும்.

பலியான ரங்கநாதன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

1 More update

Next Story