தேங்காய் எண்ணெய் மில்லில் தீ விபத்து


தேங்காய் எண்ணெய் மில்லில் தீ விபத்து
x
தினத்தந்தி 3 July 2023 4:44 PM GMT (Updated: 4 July 2023 8:56 AM GMT)

காங்கயத்தில் தனியார் தேங்காய் எண்ணெய் மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

திருப்பூர்

இது பற்றிய விவரம் வருமாறு:-

தேங்காய் எண்ணெய் மில்லில் தீ

காங்கயம், சென்னிமலை சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு தேங்காய் எண்ணெய் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் சுமார் 12.45 மணி அளவில் எண்ணெய் மில்லில் தேங்காய் பருப்புகள் சூடுபடுத்தும் கலனில் பணி நடந்துகொண்டிருந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அதிக சூட்டின் காரணமாக கலனில் உள்ள தேங்காய் பருப்புகள் திடீரென தீ பிடித்தது. பின்னர் புகை மூட்டம் ஏற்பட்டது. இதை அறிந்த பணியாளர்கள் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விரைந்து அணைக்கப்பட்டதால் சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகள் சிறிய சேதத்துடன் காப்பாற்றப்பட்டது. தீ விபத்தில் பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story