லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் தேங்காய் மட்டைகள்


லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் தேங்காய் மட்டைகள்
x

லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் தேங்காய் மட்டைகள் சாலைகளில் கொட்டி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

புதுக்கோட்டை

கீரமங்கலம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, செரியலூர், பனங்குளம், நகரம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளதால் தேங்காய் வியாபாரிகளும் ஏராளம் உள்ளனர். விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்லும் தேங்காய்களை தங்களது பட்டறைகளில் கொட்டி உரித்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இங்கு உறிக்கப்படும் தேங்காய் மட்டைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் ஆலங்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு தேங்காய் உரிமட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்லும் போது அதிக உயரத்திற்கு ஏற்றி மேலே பாதுகாப்பிற்கான வலைகள், தார்ப்பாய்கள் போடாமல் செல்வதால் கிராம சாலைகளில் மரக்கிளைகளில் இடித்து சாலை முழுவதும் தேங்காய் உரி மட்டைகள் கொட்டுகிறது. லாரியை பின் தொடர்ந்து வருவோர் தலைகளிலும் கொட்டுகிறது. அதேபோல பிரதான சாலைகளிலும் வேகத்தடை, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கு போதும் லாரியில் அதிக உயரத்தில் பாதுகாப்பு இல்லாமல் ஏற்றிச் செல்லப்படும் தேங்காய் உரிமட்டைகள் கொட்டுகிறது. இதனால் லாரியின் பின்னால் வரும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் வருபவர்கள் மட்டைகள் மீது ஏறி வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் தேங்காய் உரிமட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் மட்டைகள் கொட்டாமல் பாதுகாப்பிற்காக தார்ப்பாய், வலைகள் வைத்து கட்டி கொண்டு போக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story