கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு


கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

கோவையில் இன்று காலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதான நான்கு கோபுர நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளி பகுதிகளில் இருந்து இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு நகருக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story