பஸ் விபத்தில் இறந்தவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை


பஸ் விபத்தில் இறந்தவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 Oct 2023 7:15 PM GMT (Updated: 26 Oct 2023 7:15 PM GMT)

குன்னூர் பஸ் விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் நினைவாக கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

நீலகிரி

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி ஊட்டிக்கு சுற்றுலா வந்துவிட்டு மீண்டும் திரும்பி சென்று கொண்டிருந்த போது குன்னூர் மரப்பாலம் அருகே மலைபாதையில் 9-வது வளைவில் பஸ் கட்டுபாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதில் ஊட்டியில் இருந்து குன்னூர் வரை டிரைவர் கோபால் (32), என்பவர் பஸ் ஓட்டி வந்தார் அப்போது கிளர்ச் பிளேட்டில் இருந்து வாடை அதிகமாக வந்தது. ஆனாலும் பஸ்சை நிறுத்தாமல் இதன் பின்னர் டிரைவர் முத்துக்குட்டி (65) பஸ்சை குன்னூரில் இருந்து ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, பஸ் டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால், பஸ் உரிமையாளர் சுப்பிரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த நிலையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குன்னூரை சேர்ந்த இந்து முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்பினர் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் அவர்களது முறைப்படி பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நீலகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், குன்னூர் போலீஸ் துணை சூப்பரண்டு குமார், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி, சமுக ஆர்வலர் உஷா பிரங்களின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விபத்து நடந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


Next Story