போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சிமெண்டு சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் திருப்பதிக்கு இணையான சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22-யின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் உள்ள சாலையில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
போக்குவரத்து மாற்றம்
சிமெண்டு சாலை அமைக்கும் பணியையொட்டி பே கோபுரத் தெரு, பெரிய தெரு மூடப்பட்டு இப்பணி முடியும் வரை அப்பகுதி சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கும்,
பேகோபுரத் தெரு வழியாக நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கும், தேரடி தெருவில் இருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை, பூத நாராயண பெருமாள் கோவில், சின்னக்கடைத் தெரு வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கும்,
செங்கம் சாலையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவலப்பாதை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கும் செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த நிலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு, கல்நகர், ஆடுதொட்டி தெரு, திருகோவிலூர் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் சிமெண்டு சாலை போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு அதிகாரிகள், சிமெண்டு சாலையானது 100 மீட்டர், 100 மீட்டராக அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணி வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு முறையாக கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தினர்.
மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ள பகுதிகளில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும் உத்தரவிட்டார்.
அப்போது திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.






