மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி - கலெக்டர் வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி - கலெக்டர் வழங்கினார்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச கையடக்க கணினியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களிடம் இருந்த நிலம் சம்பந்தமாக 92 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 53 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 30 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 60 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 96 மனுகளும் என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் கிராமப்புற ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு இணையதளம் மூலம் கல்வி தொடர்பான தகவல்களை எளிய முறையில் பெற்று பயனடைவதற்கு ஏதுவாக அரசு பள்ளிகளில் பயிலும் 25 மாணவ- மாணவிகள் மற்றும் 20 கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டிலான கையடக்க கணினிகளை கலெக்டர் இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பார்வைத் திறன் குறைபாடுடைய 5 மாற்றுத் திறனாளி மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரத்து 185 வீதம் ரூ.50 ஆயிரத்து 925 மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் கருவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தனித்துணை ஆட்சியர் மதுசூதனன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.


Next Story