வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:46 PM GMT)

கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடவாம்பலம்-ஜெகன்நாதபுரம் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.33 கோடியே 95 லட்சம் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேம்பால கட்டுமானப்பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து சிறுவந்தாடு துணை சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை விவரம், மருந்து இருப்புப் பதிவேடு, சிகிச்சை பெறுபவர்கள் பதிவேடு, ஆய்வகம், மருந்தகம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், சிகிச்சை பெற வந்தவர்களிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் அதே பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார சுகாதார ஆய்வக மையம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார். பின்னர், கொங்கம்பட்டு ஊராட்சியில் ரூ.42½ லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலக கட்டிட பணி மற்றும் ரூ.4.21 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமு, சிவக்குமார், ஒன்றிய பொறியாளர்கள் குகன், ஆர்த்தி, கற்பகம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story