4 தலைமுறையாக குடியிருக்கும் இடத்தில் இருந்து காலி செய்வதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை


4 தலைமுறையாக  குடியிருக்கும் இடத்தில் இருந்து காலி செய்வதை தடுக்க வேண்டும்  கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
x

4 தலைமுறையாக குடியிருக்கும் இடத்தில் இருந்து காலி செய்வதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜேடர்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 4 தலைமுறையாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாத்துக்கு பலமுறை புகார் மனு அளித்து உள்ளனர். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்பை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற வருவாய் துறையினர் குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 3 வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து, கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- நாங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வசித்து வருகிறோம். ஒரு தனி நபரின் தூண்டுதலின் பேரில், தற்போது எங்களை காலி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அவ்வாறு நாங்கள் வெளியேற்றப்பட்டால், எங்களுக்கு வேறு இடம் இல்லை. நடுத்தெருவில்தான் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எங்கள் நிலையை தமிழக அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் எடுத்துக்கூறி, எங்கள் வீடுகளை அகற்றுவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story