கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை


கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
x

கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்காக சிவகங்கை கலெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன ரெட்டி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேரில் ஆஜரானார்.

அப்போது கோர்ட்டு உத்தரவுகளை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் கலெக்டர் ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் பட்டா மாறுதலுக்கு ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் லஞ்சம் பெற்ற பிறகு தான் கையெழுத்து போடப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றுமாறும் கோர்ட்டு உத்தரவுகளுக்கு மதிப்பு அளிக்குமாறும் கலெக்டர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.


Next Story