தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்து; கல்லூரி பேராசிரியர் பலி


தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்து; கல்லூரி பேராசிரியர் பலி
x
தினத்தந்தி 5 May 2023 9:00 PM GMT (Updated: 5 May 2023 9:00 PM GMT)

தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியானார். அவரது மனைவி, மகள் காயம் அடைந்தனர்.

தேனி

தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியானார். அவரது மனைவி, மகள் காயம் அடைந்தனர்.

கல்லூரி பேராசிரியர்

கோவை சூலூர் அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜெயபாஸ்கரன் (வயது 36). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சீதாரமா (33). இவர்களுடைய மகள் தனிஷ்கா (7).

சீதாரமாவின் பெற்றோர் வீடு தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் உள்ளது. ஜெயபாஸ்கரன் தனது மனைவி, மகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று போடி திருமலாபுரத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். காரை திருமலாபுரத்தை சேர்ந்த ஆனந்தராமபாண்டி (31) என்பவர் ஓட்டினார்.

தேனி-போடி சாலையில் கோடாங்கிபட்டியை அடுத்த தீர்த்தத்தொட்டி கோவில் பகுதியில் நேற்று அதிகாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. ஒருகட்டத்தில் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது கார் மோதியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் ஜெயபாஸ்கரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி சீதாரமா, மகள் தனிஷ்கா, காரை ஓட்டிய ஆனந்தராமபாண்டி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பலியான ஜெயபாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story