பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி


பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
x

பேரம்பாக்கம் அருகே கோவில் விழாவில் டிஜிட்டல் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

காஞ்சிபுரம்

கல்லூரி மாணவர்

பேரம்பாக்கம் அருகே உள்ள வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மும்முடிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சதீஷ் என்கின்ற சதீஷ்குமார் (வயது 20). சதீஷ் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் மும்முடிக்குப்பம் காலனியில் உள்ள பழண்டி அம்மன் கோவில் முதல் ஆடி மாத கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சதீஷ் தனது நண்பர்களுடன் சென்று கோவில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து கோவில் அருகில் டிஜிட்டல் பேனர்களை கட்டிக்கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது சதீஷ்குமார் ஒரு பேனரை எடுத்து கட்டும்போது அந்த பேனரில் இருந்த இரும்பு கம்பியானது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியின் மீது பட்டது. இதில் சதீஷ்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார். இதை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மப்பேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோவில் விழாவில் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story