மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி


மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
x

தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் மேடவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.?

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஆர்.எம்.வீரப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரிஷிதரன் (வயது 17). இவர், சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டுடிப்ளமோ படித்துவந்தார். மேலும் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ரிஷிதரன், மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

மேடவாக்கம் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரிஷிதரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story