தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி: மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்


தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி: மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
x

விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா (18). இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரம்யா கல்லூரியில் முதல் மாடியில் உள்ள தனது வகுப்பிற்கு சென்றார். பின்னர் காலை 10.30 மணிக்கு சக மாணவிகளிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்.

அப்போது திடீரென முதல் மாடியில் இருந்து ரம்யா கீழே குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். மாணவி திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அனைத்து மருத்துவ உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வரை கல்லூரி மாணவி சுயநினைவின்றி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னை சென்று சிகிச்சைக்கு பிறகு தான் மாணவியின் உடல்நிலை குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை சம்பவம் குறித்து பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், கல்லூரி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் தற்கொலை முயற்சிக்கான உண்மை காரணத்தை கண்டறிய ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா, டி.எஸ்.பி. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story