மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள ரைஸ்மில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). இவரது உறவினர் காட்டுப்பட்டியை சேர்ந்த மங்கப்பன் மகன் விஜயகுமார் (18). இந்நிலையில், தங்கவேல் வீட்டிற்கு வந்த விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு காட்டுப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக குளத்தூர் தாலுகா பெரம்பூரை சேர்ந்த விஜயராமன் மகன் வீரசேகர் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

வாலிபர் பலி

இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

இதில் வீரசேகர் மட்டும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story