சமுதாய நலக்கூடம் இடிந்து 3 வாலிபர்கள் பலி


சமுதாய நலக்கூடம் இடிந்து 3 வாலிபர்கள் பலி
x

சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி நின்ற 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த கட்டிடம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த சமுதாய நலக்கூடத்தின் முன்புறம், பஸ் ஏறுவதற்காக காத்திருப்பவர்கள் நிற்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதலே இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணிக்கும் மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது உடுமலை பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என 20-க்கும் மேற்பட்டோர் சமுதாயநலக்கூடத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரையின் (சிலாப்) கீழ் காலை 8.30 மணிக்கு பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது ஒரு தனியார் பஸ் வந்தது. அதில் பலரும் ஏறி சென்றனர்.

இடிந்து விழுந்தது

ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் அடுத்து வரும் பஸ்சில் ஏறி செல்லலாம் என்று கொழுமம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் முரளி ராஜா (வயது 35), கூலித்தொழிலாளி மணிகண்டன் (28), கவுதம் (29) ஆகியோர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சமுதாய நலக்கூடத்தின் முன்புறம் உள்ள சிலாப் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

3 பேர் பலி

இந்த இடிபாடுகளுக்குள் முரளிராஜா, மணிகண்டன், கவுதம் ஆகிய 3 பேரும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உதவிக்கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்ற முயன்றனர். அவர்களால் முடியாததால் பொக்லைன் எந்திரத்தை வரவழைக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன. பின்னர் 3 பேரும் உடல் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அந்த சமுதாய நலக் கூட கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் பலியான முரளி ராஜாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கவுதமிற்கு திருமணமாகவில்லை.

முன்கூட்டியே வந்த பஸ்சில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஏறிச் சென்றுவிட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2 லட்சம் நிதிஉதவி

உயிரிழந்த 3 பேரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தவிட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story