சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்


சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
x

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

திருவாரூர்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் ெதரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்்கையில் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதும், சேமித்துவைப்பதும், வினியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் உபயோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்குமண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இத்தடை ஆணையை செயல்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒருசிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டுவருகின்றன.

தகவல் தெரிவிக்க வேண்டும்

எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அந்த தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புகார்களை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாகப்பட்டினம் அலுவலகத்திற்கு கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் (04365 250832), கைப்பேசிஅழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் (8056049500) மூலம் தெரிவிக்கலாம். புகார்அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ரகசியத்தன்மை பராமரிக்கப்படும்

இது உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதை தடுக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும். சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத்தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story