புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

சாலை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள சில தெரு பகுதி சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து புதிய சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதர் மீரான், ஆர்.எஸ்.மங்கலம்.

சுற்றுச்சுவர் தேவை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சேரந்தை கிராமத்தில் உள்ள பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் உள்ளே நுழைகின்றன. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் வகுப்பறைக்குள் நுழையும் அபாயமும் உள்ளது. எனவே இங்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், கடலாடி.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 2-வது வார்டு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு தெரு மற்றும் திரவுபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் நகர் கேணிக்கரை பைசல் நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதியில் மழைக்காலங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதன், ராமநாதபுரம்.

ரேஷன் கடை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அடுத்தகுடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரேஷன்கடை இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்கள் வேறு கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்த பகுதியில் ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருவாடானை.


Next Story