புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கையில் இருந்து நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கிருந்து பயணம் செய்யும் பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலன்கருதி இப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாணிக்கம், சிவகங்கை.

நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பயணிப்பது வழக்கம். எனவே பக்தர்களின் நலன் கருதி பழனி-காரைக்குடி (வழி திண்டுக்கல், புதுக்கோட்டை) இடையேயும், பழனி- தாம்பரம் (வழி திண்டுக்கல், தஞ்சாவூர், சிரம்பரம், விழுப்புரம்) இடையிலான பயணிகள் சிறப்பு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-மேலூரிலிருந்து மதுரை வரும் மெயின்ரோடு குறிப்பாக ரணசிங்கபுரம், கோட்டையூர், கருப்பூர், எஸ்.எஸ்.கோட்டை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகளில் அவதியடைவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், சிவகங்கை.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலாயுதம், திருப்பத்தூர்.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் சில இடங்களில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள், குழந்தைகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருக்கோஷ்டியூர்.


Next Story