ஊழல் முறைகேடு புகார்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்


ஊழல் முறைகேடு புகார்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்
x

மூன்று மாதங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விதிமீறல்கள், புகார்கள், ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செல்வபெருந்தகை, கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார். இதன்படி முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பல்வேறு முன்னாள் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூரப்பா பதவியில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story