செல்போனில் ஆபாசமாக பேராசிரியர் பேசியதாக புகார்: அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம்


செல்போனில் ஆபாசமாக பேராசிரியர் பேசியதாக புகார்: அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம்
x

செல்போனில் ஆபாசமாக பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர், பி.ஏ. வரலாற்றுத்துறை 2-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாகவும், மற்றொரு மாணவியின் செயல்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது. அதை அந்த மாணவி செல்போனில் பதிவு செய்துள்ளார்.

தற்போது அந்த பேராசிரியர் பேசிய அந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று காலை அந்த பேராசிரியர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அதை அறிந்த கல்லூரி மாணவ- மாணவிகள் அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மேகலா, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

பின்பு திடீரென மீண்டும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. அதன்பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் வந்து கல்லூரி முதல்வர் மேகலாவிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மேகலா கூறினார். அதை தொடர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story