குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக புகார்


குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக புகார்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

கூடலூரில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிந்து உடனுக்குடன் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

தேனி

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் ஓடை தெரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதையடுத்து நேற்று நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிந்து உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் நடந்தது. பின்னர் அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story