பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி - தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்


பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி - தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்
x

பாடி அருகே தாய் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், போரூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக போரூரில் இருந்து அண்ணாநகர் வழியாக வந்த திவ்யாவை அவரது தாய் மகேஸ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இரவு 10 மணியளவில் பாடி அடுத்த தாதங்குப்பத்தை கடந்து சென்ற மகேஸ்வரி, ரெட்டேரி 100 அடி சாலை-வாட்டார் கேனல் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் லாரியின் பின்பக்க சக்கரம் திவ்யா மீது ஏறி இறங்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் திவ்யாவை மீட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், திவ்யா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான கொளத்தூர் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story