கிருஷ்ணகிரி, ஓசூரில்காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, ஓசூரில்காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2023 7:00 PM GMT (Updated: 20 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொடர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசின் போக்கை கண்டித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, யுவராஜ், தேவநாராயணன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர்கள் ஹரி, சங்கர், ஜெயசீலன்,சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நேற்று ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயலாளர் வீர.முனிராஜ், ஓ.பி.சி. அணி தலைவர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், பரமானந்த பிரசாத், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, கீர்த்தி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story