காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 April 2023 8:45 PM GMT (Updated: 8 April 2023 8:46 PM GMT)

தேனி அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் போராட்டங்கள் நடத்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திரமோடி நேற்று தமிழகம் வருகை தந்தபோது, தேனியில் ஆலோசனை கூட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த இடத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டம் முடியும் வரை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த கூட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்து வருகிற 15-ந்தேதி தேனியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது, கிராமங்கள் தோறும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து பிரசார கூட்டங்கள் நடத்துவது, 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story