இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்


இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
x

இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

நரிக்குடி அருகே இருஞ்சிறை விலக்கில் இருந்து கட்டணூர் செல்லும் சாலையில் மறையூர் கண்மாய் மறுகால் பகுதியில் தரைப்பாலம் இருந்தது. இந்த தரைப்பாலம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் இந்த பாலம் வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் மறையூர் கண்மாய் மறுகால் தண்ணீர் செல்லும் போது இந்த பகுதியில் உள்ள இருஞ்சிறை, தர்மம், மணிகட்டியேந்தல், கொட்டகாட்சியேந்தல், தேளி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் சைக்கிள்களில் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பாலம் மேம்பாலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் தரைப்பாலம் இருந்ததால் மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆதலால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


Next Story