திருச்சி விமான நிலையத்தில் துரிதமாக நடைபெற்று வரும் புதிய முனைய கட்டுமான பணி


திருச்சி விமான நிலையத்தில் துரிதமாக நடைபெற்று வரும் புதிய முனைய கட்டுமான பணி
x
தினத்தந்தி 21 Jun 2023 7:25 PM GMT (Updated: 22 Jun 2023 12:11 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருச்சி

புதிய முனையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக கட்டுமான பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது கட்டுமான பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

விரைவில் திறப்பு விழா காணுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது.

விரைவில் திறக்க...

ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 48 பரிசோதனை கவுண்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி மற்றும் இதர கருவிகள் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயில், விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் புதிய முனையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். இதன்மூலம் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் விமான நிலைய முனையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story