சங்ககிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது


சங்ககிரி அருகே  14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
x

சங்ககிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சங்ககிரி

14 வயது சிறுமி கர்ப்பம்

தேவூர் அருகே கத்தேரி சாமியம்பாளையம் செட்டியார் காடு மேல்வளவு பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது

மேலும் அவர் திருச்செங்கோடு விநாயகர் கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்ககிரி சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர்நல அலுவலர் ஆகியோர் நேரில் சென்று சிறுமியின் நிலைமை குறித்து விசாரித்தனர். இதில் 14 வயது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் சேலம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு அறிக்கை அளித்தனர்.

கட்டிட தொழிலாளி கைது

அதன்பேரில் கட்டிட தொழிலாளி விஜயகாந்த் மீது சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி நடவடிக்கை எடுக்க வேண்டி சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குழந்தை திருமணம் செய்து 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விஜயகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.


Next Story