கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

தானிப்பாடி அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே உடையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 28), கட்டிட கூலி தொழிலாளி.
இவருக்கும் பவானி (19) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள தனது பாட்டி ஊரான அருவங்காடு கிராமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
வாரத்திற்கு ஒருமுறை மனைவியை பார்ப்பதற்கு உடையார்குப்பம் வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வருவதாக கூறி இருந்த சந்திரசேகர் வரவில்லை. இன்று காலை அவர் புதூர்செக்கடி கிராமத்தில் வீராத்தா கோவில் அருகில் உள்ள ஒரு பாலத்தில் சந்திரசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பவானி தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






