மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x

மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

காஞ்சிபுரம்

காட்ரம்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 34). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு இருங்காட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காட்ரம்பாக்கம் பகுதியில் செல்லும் போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் உயர் அழுத்த மின்கம்பம் இரண்டாக உடைந்து லாரியின் மீது விழுந்தது. உடனே லாரியில் இருந்து டிரைவர் சத்யராஜ் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மின்கம்பம் உடைந்ததால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

இது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காட்ரம்பாக்கம், அமரம்பேடு பகுதிகளில் உள்ள மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story