தொடரும் கஞ்சா வேட்டை: கடலூா் மாவட்டத்தில் 17 பேர் கைது


தொடரும் கஞ்சா வேட்டை:  கடலூா் மாவட்டத்தில் 17 பேர் கைது
x

கடலூா் மாவட்டத்தில் போலீசாா் நடத்திய கஞ்சா வேட்டையில் 17 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்றதாக 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல், தினசரி கஞ்சா வழக்குகளில் சிக்குபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றதாக திருப்பாதிரிப்புலியூர் கே.என்.பேட்டையை சேர்ந்த திவான் (வயது 20), கவியரசன் (22), திருவாமூர் சரவணன் (25), விராட்டிக்குப்பம் ராம்குமார் (22), சிதம்பரம் சரவணன் (34), பரசுராமன் (27) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக கோதண்டராமபுரம் ஜெயபிரகாஷ் (46), ரெட்டிச்சாவடி ராமநாதன் (43), சிதம்பரம் மனோகர் (55), சிறுபாக்கம் கோவிந்தசாமி (53), திட்டக்குடி குணசேகரன் (68), அமுதா (60), வேப்பூர் ஆரித்கனி (43), புதுப்பேட்டை கலா (57), அம்புஜவள்ளிபேட்டை ஜோதிலட்சுமி (40), கொட்டாரம் பிரபு (40), லட்சுமணாபுரம் சின்னையன் (28) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story