வால்பாறையில் தொடர் அட்டகாசம்: டீக்கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்


தினத்தந்தி 19 Sep 2023 7:00 PM GMT (Updated: 19 Sep 2023 7:00 PM GMT)

வால்பாறையில டீக்கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கோயம்புத்தூர்


வால்பாறை


வால்பாறையில டீக்கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.


டீக்கடை சேதம்


வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. குறிப்பாக மானாம்பள்ளி வனப் பகுதிக்குட்பட்ட நல்லமுடி, ஆனைமுடி மற்றும் தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாட்டுள்ளது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் வாகமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வந்த குட்டிகளுடன் கூடிய 11 யானைகள் கொண்ட கூட்டம் நள்ளிரவில் 2.30 மணியளவில் தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வள்ளியம்மாள் என்பவரின் டீக்கடை சுவற்றை உடைத்து கடைக்குள் நுழைந்து கடையிலிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.


வனச்சோலையில் காட்டு யானைகள் முகாம்


அதிகாலையில் கடையை திறப்பதற்காக வள்ளியம்மாள் வந்த போது கடை முழுவதையும் யானைகள் உடைத்து சேதப்படுத்திச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டப் பகுதிக்கு அருகில் உள்ள சிறு வனச்சோலையில் முகாமிட்டு நிற்பது தெரிய வந்தது.


வனத் துறையினர் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாடுவதை முன்னிட்டு அருகில் உள்ள எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி மக்களை கவனமாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.





Next Story