தொடர் மழை எதிரொலி:முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர் மழை எதிரொலி:முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.80 அடியாக இருந்தது. நீர்வரத்து இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 204 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக திறந்துவிடப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்ட பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- தேக்கடி 29, கூடலூர் 12, உத்தமபாளையம் 14, சண்முகா நதி அணை 17.6, வைகை 8.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 60, பெரியகுளம் 28, அரண்மனைபுதூர் 1.


Related Tags :
Next Story