தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்..!


தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்..!
x

தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி,

உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் சூரியன் உதயமாகும் காட்சியை தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்த்து ரசித்தனர். இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story