நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 20-ந் தேதி அணையின் நீர்மட்டம் 118.85 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 415 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது அணையின் நீர்ப்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.05 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 928 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு அணை 13.2, தேக்கடி 2.4, சண்முகா நதி அணை 1.8, போடி 3, மஞ்சளாறு அணை 7, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 4.2, அரண்மனைபுதூர் 13. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story