ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்
x

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

பெரம்பலூர்

ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் செலுத்திட வேண்டும். கடந்த மே மாதம் 15 நாட்கள் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்த தின ஊதியம் ரூ.580-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பணிகளை புறக்கணித்து காலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மதியம், இரவு நேர உணவுகளை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் போராட்டக்காரர்களிடம் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் போலீசாரும், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராதா தலைமையில் அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆணையாளர் ராதா பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும் என்று எழுதி கையெழுத்திட்டு போராட்டக்காரர்களிடம் கொடுத்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று வழக்கம் போல் அவர்கள் வந்து தங்களது பணிகளை செய்தனர்.


Next Story