96 நாட்களுக்கு பிறகு 200-ஐ தாண்டிய கொரோனா


96 நாட்களுக்கு பிறகு 200-ஐ தாண்டிய கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 219 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 13 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 121 பேரும், பெண்கள் 98 பேரும் உள்பட 219 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 96 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 129 பேர், செங்கல்பட்டில் 41 பேர் உள்பட 13 மாவட்டங்களில் தொற்று பதிவாகி உள்ளது. 25 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 40 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 7 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.

சென்னையில் 641 பேர் சிகிச்சை

தமிழகத்தில் 85-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் நேற்றைய நிலவரப்படி 1,159 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 641 பேரும், செங்கல்பட்டில் 216 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 60 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

137 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 17 ஆயிரத்து 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story