"புதுச்சேரி கலால் துறையில் ஊழல் நடக்கிறது"


புதுச்சேரி கலால் துறையில் ஊழல் நடக்கிறது
x

‘புதுச்சேரி கலால்துறையில் ஊழல் நடக்கிறது’ என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

திண்டுக்கல்

பழனியில் தரிசனம்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து போகர் சன்னதியில் தியானம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் சார்பில், மக்கள் நலன்குறித்த வாக்குறுதிகளை கூறி பிரசாரம் செய்ததால் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

ஆனால் பா.ஜ.க. சார்பில், பிரதமர் மோடி பிரசாரத்தின்போது ஊழலை ஒழிப்போம் என்றார். உண்மையில் இவர்கள் ஆட்சியில்தான் பல ஊழல்கள் நடைபெறுகின்றன. மோடி உதவியதன் மூலமே அதானி பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால், ராகுல்காந்தியின் பதவியை பறித்து வெளியே அனுப்பினர்.

புதுச்சேரியில் இருந்து கடத்தல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரியது. கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்துதான் தமிழகத்துக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1½ ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது. இதுபற்றி புதுச்சேரி முதல்-அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆட்சியில் 400 மது விற்பனை நிலையங்கள் இருந்தது, தற்போது 900-மாக உயர்ந்துவிட்டது. அதாவது குடித்துவிட்டு கும்மாளம் ஆடுகின்ற களமாக புதுச்சேரி மாறியுள்ளது. 24 மணி நேரமும் மதுக்கடைகள் திறந்துள்ளதால் கலாசாரம் சீரழிந்துள்ளது.

கலால்துறையில் ஊழல்

கள்ளச்சாராயம் கடத்தப்படுவதை புதுச்சேரி கலால்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார். மேலும் கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி கலால்துறை மூலம் முதல்-அமைச்சருக்கு கப்பம் கட்டுகிறார்கள். கலால்துறையில் நடக்கும் ஊழலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக செயல்படவில்லை, முதல்-அமைச்சராக செயல்படுகிறார். அவர், முதல்-அமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்து புதுச்சேரியில் தங்கியுள்ளார். இவர் தெலுங்கானாவுக்கு செல்வதில்லை. காரணம் அங்குள்ள அதிகாரிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. ஆனால் புதுச்சேரியில் ஏமாளி முதல்-அமைச்சர் தலையாட்டியாக உள்ளதால் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

----------------


Next Story