பஞ்சு வியாபாரிகள் வேலை நிறுத்தம்


பஞ்சு வியாபாரிகள் வேலை நிறுத்தம்
x

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ேகாரி பஞ்சு வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ேகாரி பஞ்சு வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்பாலைகள்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பருத்தியிலிருந்து கொட்டையை பிரித்து எடுக்கும் ஜின்னிங் ஆலைகள், கழிவு பஞ்சை சுத்திகரிக்கும் வில்லோ ஆலைகள், சுத்திகரிக்கப்பட்ட பஞ்சில் இருந்து பருமனான நூல் தயாரிக்கும் ஆலைகள் என எண்ணற்ற ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலைகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டணத்தை விட தற்போதைய மின்சார நிலைக்கட்டணம் 430 விழுக்காடு உயர்ந்து உள்ளதாகவும், பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய பரபரப்பு நேரத்தில் மின்சார கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தி உள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

போராட்டம்

இதனால் தற்போது தொழில் நசிந்து வருவதாகவும், பல ஆலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், சில ஆலைகள் மூடக்கூடிய நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். இந்தநிலையில் நூற்பாலை மற்றும் அதனை சார்ந்த தொழில்களை காப்பாற்ற கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இதில் ராஜபாளையத்தில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் பங்ேகற்றன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை உரிமையாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மதுரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 430 சதவீதம் உயர்ந்துள்ள நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

தொழிற்சாலையின் மேற்கூரையில் சோலார் பேனல் மின் உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Next Story