ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊஞ்சவேலாம்பட்டியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு, செலவு கணக்குகளை கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கணக்குகளை கொடுக்காமலும், கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊராட்சி தலைவர், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்டு சென்றாக கூறப்படுகிறது. அதன்பிறகும் உறுப்பினர்கள் மன்ற கூட்டரங்களில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது:-
பணிகள் மேற்கொள்வதில்லை
1-வது வார்டில் பணிகள் நடக்கவில்லை. ஆனால் பணத்தை எடுத்து உள்ளனர். இதேபோன்று எந்த பணிகளையும் முடிக்காமல் ஊராட்சி கணக்கில் இருந்து பணத்தை மட்டும் எடுத்து கொள்கின்றனர். மேலும் ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை கேட்டால் கொடுப்பதில்லை. இதுதொடர்பாக கேட்டால் சரியான பதிலும் கூறுவதில்லை. ஊராட்சி பகுதியில் புதிதாக குடியிருப்பு வீட்டுமனைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் போது அங்கு மேல்நிலை தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து இருக்க வேண்டும்.
ஆனால் எந்த வசதியும் செய்யாமல் அனுமதி கொடுக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தில் பணம் இருந்தும் எந்த பணிகளும் மேற்கொள்வதில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை மற்றும் தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பதில்லை. எனவே இதுகுறித்து ஊராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






