பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கான ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்படும்


பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கான ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்படும்
x

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கான ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்படும் என்று கலெக்டர் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரித்து சிகிச்சை விபரங்களை அவர் கேட்டறிந்தார். செல்லப்பிள்ளை பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலமாக பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம், தாய்ப்பால் கொடுக்கும் முறை, சீம்பாலின் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு, சரியான குழந்தை வளர்ப்பு திறனை மேம்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் அளித்தல் மற்றும் சிகிச்சை பெற்று திரும்பும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை அளித்தல் மற்றும் வீடுகள் பார்வை மூலம் தொடர் கவனிப்பு அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள `செல்லப்பிள்ளை' எனும் ஆலோசனை மையம் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது வரை 135 வேலை நாட்களில், 4,276 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான இணை உணவு கொழுக்கட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை மாவட்டத்தில் விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜ்மோகன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story