அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு


அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு
x

கரூர், குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கரூர்

மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 377 இடங்களுக்கு 1,106 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுகலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு என அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு, மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் உள்ள 65 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவு

இந்த கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு என மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. வருகிற 11-ந்தேதி முதுகலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு என அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு 13-ந்தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

குளித்தலை

அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை கலை மற்றும் அறிவியல் பாடங்களான முதுகலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், முதுநிலை அறிவியல் பாடங்களான மின்னணுவியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.

இந்த கலந்தாய்வில் உரிய சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தகுதியுடைய மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்தநிலையில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 11,12,13 ஆகிய 3 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பிக்காதவர்கள் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு இக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story