இறந்தவர் உடலை உறவினர்கள் பெறாவிட்டால் போலீசாரே அடக்கம் செய்ய நடவடிக்கை


இறந்தவர் உடலை உறவினர்கள் பெறாவிட்டால் போலீசாரே அடக்கம் செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:52 PM GMT (Updated: 22 Sep 2022 9:43 PM GMT)

இறந்தவர் உடலை உறவினர்கள் பெறாவிட்டால் போலீசாரே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எனது இளைய மகன் தங்கப்பாண்டிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 13-ந் தேதி அருப்புக்கோட்டை நகர போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், தங்கப்பாண்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளதாகவும், எங்களை உடனடியாக அங்கு செல்லுமாறும் தெரிவித்தனர்.

அங்கு சென்றபோது எனது மகன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவரது உடலில் 11 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவர் இறப்பதற்கு முன்பு அந்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீஸ்நிலையத்தில் சட்டவிரோதமாக எனது மகனை அடைத்து வைத்து போலீசார் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்துள்ளார். எனவே எனது மகனை சட்டவிரோத காவலில் தாக்கிய வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் மகன் இறப்பு வழக்கு விசாரணை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஏற்கனவே தங்கப்பாண்டி இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டது. எனவே மனுதாரர் மகன் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் போலீசாரே தங்கப்பாண்டியின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம், என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில் உடலை பெற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.


Next Story