தர்மபுரி மாவட்டத்தில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு


தர்மபுரி மாவட்டத்தில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 13 May 2023 7:00 PM GMT (Updated: 13 May 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படியும் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா, மாவட்ட குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் பங்கேற்று சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்கள். வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர். இதேபோல் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில், தர்மபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வார கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 1996 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.4 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.


Next Story