கோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரண்


கோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரண்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:45 PM GMT)

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர், கோர்ட்டில் சரண் அடைந்தார்.

ராமநாதபுரம்

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர், கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பாலியல் பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு அ.தி.மு.க.கவுன்சிலரும், முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது மதுரை ஐகோர்ட்டு நீதிபதி இளங்கோவன், அ.தி.மு.க.கவுன்சிலர் சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கினை வேறு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

பிடிவாரண்டு

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சிகாமணி தவிர மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் 4 பேருக்கும் வரும் 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த, அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

இதனிடையே சிகாமணி தன் மீதான ஜாமீன் ரத்து உள்ளிட்ட உத்தரவினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அடுத்த விசாரணை வரை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவினை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

கோர்ட்டில் சரண்

இதைத்தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி ராமநாதபுரம் கோர்ட்டில் பிறப்பிக்கப்பட்ட தன் மீதான பிடிவாரண்டு உத்தரவை ஏற்று கூடுதல் மகிளா நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கண்ட வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story