மாலை தாண்டும் திருவிழாவில் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்தது .


மாலை தாண்டும் திருவிழாவில் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்தது .
x

தோகைமலை அருகே நடந்த மாலை தாண்டும் திருவிழாவில் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

கரூர்

மாடுகள் மாலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தொப்பாநாயக்கம்பட்டயில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு தாசிரி பொம்மாநாயக்கர் மந்தையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் மாரியம்மன் சாமிக்கு தேவராட்டத்துடன் வழிபாடு நடந்தது. 2-ம் நாள் சமூக வழக்கப்படி அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மனுக்கு கொழுக்கட்டை படையல் வைத்து ஆராதனை நடைபெற்றது. அன்று இரவு கோவில் வீட்டில் இருந்து உருமி, தாரை தப்பட்டை முழங்க பூஜை கூடைகள் அழைத்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு

இதில் கலந்து கொள்ள திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 13 மந்தையர்களுக்கு தாசிரி பொம்மா நாயக்கர் மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவில் முன்பாக 13 மந்தைகளின் மாடுகளுக்கு தனித்தனியாக புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தாரைதப்பட்டை முழங்க தாசிரி பொம்மாநாயக்கர் மந்தை எதிரே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு மாடுகளை அழைத்து சென்றனர்.

அங்கு உள்ள எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகள் மீது புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் தாசிரி பொம்மாநாயக்கர் மந்தையில் மாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டஎல்லை கோட்டை நோக்கி ஓடி வந்தது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

எலுமிச்சை பழம் பரிசு

இதில் கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த கோப்பா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லை கோட்டை தாண்டியது. 2-வது மாடாக கரூர் மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்த உடுமலை சீல் நாயக்கர் மந்தை மாடு எல்லைக் கோட்டை தண்டியது. பின்னர் முதலாவதாக வந்த மாட்டின் மீது சமூக வழக்கப்படி 3 கன்னிப்பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு எலுமிச்சைபழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் 3 கன்னிப்பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து அனைத்து மந்தையர்களையும் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், அபிஷேக, ஆதாரனை நடந்தது.


Next Story