பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம்


பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

85,736 விவசாயிகள் பதிவு

தமிழ்நாட்டில் 2022-2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பு மற்றும் ராபி பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர்காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழக நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அல்லது உளுந்து மற்றும் பச்சை பயறு, பருத்தி, நிலக்கடலை, கரும்பு அறிவிக்கை செய்யப்பட்டு, இதுவரை 85,736 விவசாயிகள் பதிவு செய்து 2.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்க்காப்பீடு

தற்போது அறிவிக்கை செய்யப்பட்ட நெல் தரிசில் பருத்தி, நெல், கரும்பு ஆகிய பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு நடைபெற்று வரும் நிலையில், காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வருகிற 15-ந்தேதிக்குள் நெல் (கோடை நெல்), 31-ந் தேதிக்குள் கரும்பு மற்றும் பருத்திக்கும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

1.5 சதவீதம் பிரீமியம்

பயிர் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 35 ஆயிரத்து 50-மும், பருத்திக்கு ரூ.15 ஆயிரத்து 894-மும், கரும்புக்கு ரூ.52ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

அதாவது பருத்தி ஒரு ஏக்கருக்கு ரூ.795-ம், நெல்லுக்கு 526-ம் கரும்புக்கு ரூ.2,600- ம் பிரீமியமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

இ-சேவை மையம்

விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய பிரீமியம் செலுத்தி பருத்தி, கோடை நெல், கரும்பு ஆகிய பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story