சேலம் கடைவீதியில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்


சேலம் கடைவீதியில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2022 7:45 PM GMT (Updated: 23 Oct 2022 7:45 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சேலம் கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டனர்.

சேலம்

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சேலம் கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் ஜவுளி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகரில் உள்ள ஜவுளி கடைகளில் நேற்று தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைவீதி, முதல் அக்ரஹாரம், சின்னக்கடை வீதி, அருணாசல ஆசாரி வீதி, தாதுபாய்குட்டை, புதிய பஸ் நிலையம், சுவர்ணபுரி, 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

பொதுமக்கள் கூட்டம்

குறிப்பாக சேலம் கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அங்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைகளிலும், சாலையோர வியாபாரிகளிடமும் ஜவுளி விற்பனை மும்முரமாக நடந்தது. சாலையோர கடைகளில் சேலை, சுடிதார், மெடி, பேண்ட், சர்ட், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள் விற்பனை படுஜோராக நடந்தது.

இதுதவிர பெண்கள் பயன்படுத்தும் வளையல், கம்மல், ஹேண்ட்பேக் மற்றும் காலணிகள் (செருப்பு) வியாபாரமும் சூடுபிடித்தது. கடைவீதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருவள்ளுவர் சிலை அருகே வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் திருப்பிவிட்டு மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் சிலர் ஈடுபடலாம் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர்.

பட்டாசு விற்பனை

சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், 4 ரோடு, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, அழகாபுரம், குகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகளில் ஸ்வீட் மற்றும கார வகைகளின் விற்பனை களைகட்டியது. இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதேபோல், மாநகரில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனையும் மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றதை காணமுடிந்தது. சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களிலும், சூரமங்கலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் காலை முதல் மாலை வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story