கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது

கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ந் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும், அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வு வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் I மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கு பாடவாரியான மற்றும் முழு மாதிரி தேர்வுகள் வருகிற 17-ந் தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
16-ந் தேதி வரை முன்பதிவு
இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள், இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






