200 ஏக்கரில் தடியங்காய் சாகுபடி; போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க கோரிக்கை

விளாத்திகுளம் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட தடியங்காய்கள், போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட தடியங்காய்கள், போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடியங்காய் சாகுபடி
விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார், கோட்டைமேடு பகுதிகளில் இந்தாண்டு விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தடியங்காய் சாகுபடி செய்திருந்தனர். இதற்கு விதைப்பு செய்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, பூச்சி மருந்து தெளித்தல், வேலையாட்கள் கூலி என 1 ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் கொடிகளை பாதுகாத்ததன் விளைவாக இப்பகுதியில் தடியங்காய்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் உள்ளது.
இதையடுத்து நன்கு விளைந்த தடியங்காய்களை விவசாயிகள் தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது அங்குள்ள வியாபாரிகள், தடியங்காய்களுக்கு தற்போது விலை இல்லை என்பதை காரணம் காட்டி வாங்க மறுக்கின்றனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதனால் மனமுடைந்த விவசாயிகள் தடியங்காய்களை சந்தைகளுக்கு கொண்டும் செல்லும் வாகனங்களின் வாடகைக்குக்கூட விலை கிடைக்காத நிலையில், நிலத்தில் இருக்கும் தடியங்காய்களை என்னசெய்வதென்று தெரியாமல், நிலத்திலேயே காட்சிப்பொருளாக விட்டுவிட்டு திகைத்து நிற்கின்றனர்.
எனவே அரசு நிவாரணம் வழங்கினால், விலை போகாத தடியங்காய்களை அழித்து, அவற்றை நிலத்திற்கு உரமாக்கி விட்டு மீண்டும் விவசாய பணிகளை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.